கல்வி அமைச்சின் அறிவித்தலால் அசௌகரியம்: ஆசிரியர் சேவை சங்கம் குற்றச்சாட்டு

03.12.2021 06:38:54

பாடசாலை மாணவர்களின் இந்த ஆண்டுக்கான பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தின் காரணமாக, ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த போதியளவு காலம் இல்லை என்று கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தமக்கு கிடைக்க வேண்டிய பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி கல்வி கூட்டுறவு பொது சேவைகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை, எதிர்காலத்தில் மேலும் கடுமையாக்கப்படும் என சங்கத்தின் தலைவர் நந்தன ஹேவகே தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 17 நாட்கள் கடந்துள்ளபோதிலும், எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் இதுவரையில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.