கல்முனையில் 17 வயது கைதியின் மரணம் : ஒருவர் கைது !

03.12.2023 09:59:44

17 வயது கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்முனையில் உள்ள சிறுவர் தடுப்பு நிலையத்தின் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த 17 ஆம் திகதி திருட்டு குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, குறித்த சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த சிறுவன் கடந்த மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அடிப்படையில், குறித்த சிறுவனின் உடலில் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்பின்னர் குறித்த சிறுவர் நன்னடத்தை நிலையத்தின் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.