நெதர்லாந்தினால் மீள கையளிக்கப்பட்ட தொல்பொருட்களை மக்கள் பார்வையிட சந்தர்ப்பம்

05.12.2023 14:00:00

நெதர்லாந்தினால் மீள கையளிக்கப்பட்ட தொல்பொருட்கள் இன்று (05) முதல் மறு அறிவித்தல் வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொல்பொருட்களை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு புத்தசாசன மற்றும் சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் இன்று தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

தங்கத்தால் தயாரிக்கப்பட்ட உறையுடன் கூடிய வாள், வெள்ளியினால் செய்யப்பட்ட உறையுடன் கூடிய வாள், தங்கத்தால் செய்யப்பட்ட கத்தி, 02 துப்பாக்கிகள், லெவ்கே பிரிவுக்கு சொந்தமானதென கருதப்படும் பீரங்கி உள்ளிட்ட 06 தொல்பொருட்களும் 1765 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் கண்டி அரச மாளிகையை சுற்றிவளைத்த போது கிழக்கிந்திய ஒல்லாந்து நிறுவனத்தினால் எடுத்துச்செல்லப்பட்டிருந்தன.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் உறுதிப்பாடுகளை மையப்படுத்தி, குறித்த தொல்பொருட்களை இலங்கைக்கு மீள கையளிக்குமாறு இராஜதந்திர அடிப்படையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

அதற்கமைய, இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தும் விசேட நிகழ்வாக 06 தொல்லியல் பொருட்களும் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு மீள வழங்கப்பட்டன. 

இந்த தொல்பொருட்கள் இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் மக்கள் பாவனைக்காக வைக்கப்படவுள்ளன.

இந்த விசேட நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில், விசேட முத்திரையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.