தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை.

22.11.2025 14:15:00

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு இந்த அரசின் 2026இன் வரவு செலவுத்திட்டம் என்ன ஆற்றுப்படுத்தலை வழங்கப்போகிறதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு இலங்கைத் தீவின் நல்லிணக்கத்துக்கான முதற்படியே சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைதான் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்திற்கான சைகையை காட்டுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் 22.11.2025இன்று இடம்பெற்ற சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!

ஆரோக்கியமான சமூகமொன்றை நோக்கிய ஆரோக்கிய வாழ்வு எனும் இலக்கோடு 2026 ஆம் ஆண்டுக்கான அரசின் சுகாதாரத்துறை சார்பான திட்டங்கள் முன்னகர்த்தப்படுகின்றன.

ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்குவதற்கு தனிமனிதனாக, குடும்பமாக, சமூகமாக நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும். தனிமனித ஆரோக்கியம் என்பதும் தனித்தே உடல் சார்ந்தது மட்டுமன்று. உடல், உளம், சமூகத்தின் கூட்டு விளைவுகளால் தனிமனித ஆரோக்கிய நிலை தீர்மானிக்கப்படுகிறது.

நினைவு தெரிந்த நாள் முதல் சிறையிலே தந்தை இருக்க வளரும் காலத்தில் தாயையும் இழந்து பின்னர் கடந்த மூன்றாம் நாள் வளர்த்த பாட்டியையும் இழந்து தனித்திருக்கும் இந்த ஈழத்தின் சிறுமியை, சிறுவனை தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறைக்குள் வாடும் தம்பி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு இந்த அரசின் 2026இன் வரவு செலவுத்திட்டம் என்ன ஆற்றுப்படுத்தலை வழங்கப்போகிறது!

அந்தப்பிள்ளைகள் இந்த இனவாத மண்ணில் பிறந்ததை விட வேறென்ன தவறு செய்தன! ஆரோக்கியமான சமூகமொன்றை நோக்கிய ஆரோக்கிய வாழ்வை உங்கள் அரசு இந்தத் தீவிலே வாழும் அந்தப்பிள்ளைக்கு வழங்காதா!

பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!

இந்தத்தீவிலே ஆயுதங்களை விரும்பி ஏற்ற இனமல்ல எங்கள் இனம். அரசியல் வழியில் போராடித்தோற்று ஆயுதங்களை ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். 2009 உடன் ஆயுதமும் மௌனிக்கப்பட்டது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே மாறிவரும் அரசுகள் முயல்வதாக அறிக்கைகள் காட்டுகின்றன. செய்திகளில் அரசுகளின் சார்பாளர்களாக நீங்கள் மாறி மாறி எங்களை ஏமாற்றுகிறீர்கள்.

எங்கள் அயல்வீட்டுப்பிள்ளை – தம்பி ஆனந்தசுதாகரின் மகன் மற்றும் மகளைப் போல பிறந்தது முதல் இறக்கும் வரை பிள்ளைகளும், சகோதரர்களும், மனைவிகளும், கணவர்மாரும், தந்தையரும் தாய்மாரும், பாட்டன், பாட்டி மாருமாக ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் இன்னமும் வடுக்களோடு தான் நகர்கிறோம். எங்களுக்கு ஆரோக்கியமான சமூக வாழ்வுக்கான கதவை உங்கள் அரசு எப்போது திறக்கப்போகிறது.

பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!

இந்தத்தீவின் நல்லிணக்கத்துக்கான முதற்படியே – எங்களுக்காக குரல்கொடுத்து இப்போதும் சிறையில் வாடும் எங்களின் உறவுகளின் விடுதலைதான். தயவுசெய்து எங்கள் உறவுகளை விடுவித்து நல்லிணக்கச் சைகையை காட்டுங்கள்! உங்கள் வரவு செலவுத்திட்டம் முன்மொழியும் ஆரோக்கிய வாழ்வுக்கான வழியை ஈழத்தமிழர்களுக்கும் திறந்துவிடுங்கள் - என்றார்.