22இல் இருந்து அரசாங்கம் பின்வாங்காது!

31.08.2026 14:45:05

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த தடைகள் அல்லது எதிர்ப்புகள் வந்தாலும் அரசாங்கம் அதன் முடிவிலிருந்து பின்வாங்காது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

  

பதுளை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து, எந்தவொரு சவால்கள் ஏற்பட்டாலும் அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை என்று அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இதுவரை சுமார் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

22-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த ஓகஸ்ட் 18 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.