தி.மு.க.வின் விருப்ப மனு தாக்கல் ஆரம்பம்!
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினருக்கான விருப்ப மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை பெற்று தாக்கல் செய்யலாம் என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று இதற்கான விண்ணப்ப மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து இன்று முதல் தலைமை கழகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பொது வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
மகளிரும் தனித்தொகுதியில் போட்டியிடுவோரும் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் 15 ஆயிரம் ரூபாய் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப மனுக்களை பெற்றவர்கள் 24ஆம் திகதிக்குள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றன. முக்கிய கட்சிகளுடன் கைகோர்க்கும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனு 21-ந் திகதி முதல் பெறப்படுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் 24 ஆம் திகதி முதல் விருப்ப மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.