வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விஜய் கடிதம்!

14.08.2026 08:02:22

ராமநாதபுரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நடவடிக்கையால் தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பற்ற உணர்வு நிலவுவதாகவும், எனவே உடனே தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருக்கிறார்.

  

அக்கடிதத்தில், "ஆகஸ்ட் 12 இரவு, IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த சம்பவம் குறித்து உங்களின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதேபோன்று இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீனவ சமூகத்தினரிடையே, குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், மிகுந்த கவலையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது, இதுவரையில் 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தகுந்த தூதரக நடவடிக்கைகள் வாயிலாக இலங்கை அரசிடம் இக்கோரிக்கையை முன்வைத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் இவ்விவகாரத்தில் பெரும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிக்கும்" என விஜய் தெரிவித்திருக்கிறார்.