மத்திய அரசு கொரோனா விவகாரத்தில் அலட்சியம் – ராகுல் குற்றச்சாட்டு

17.02.2021 09:46:02

 

கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அதீத நம்பிக்கையுடன் அலட்சியமாக செயற்படுவதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

அதேநேரம், பிரித்ததானியா, தென் ஆப்ரிக்கா, பிரேசிலில் உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸால் இந்தியர்களும் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்நிலையில் பிரேசில், தென்னாப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், இந்தியாவில் ஊடுருவியதாக வெளியான இந்த செய்தியை ருவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், ‘கொரோனா விவகாரத்தில் இந்திய அரசு அலட்சியமாகவும் அதீத நம்பிக்கையிலும் உள்ளது. கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா குறித்து தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்க்கவா, ‘பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது. தென்னாப்ரிக்காவில் உருமாறிய வைரஸ் பாதித்த 4 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கிருந்து, இந்தியா திரும்பி வந்துள்ளனர்.

அவர்களுடன் பயணம் செய்த மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், பிரேசிலில் உருமாறிய கொரோனாவினால் ஒருவர் பாதிக்கப்பட்டது பெப்ரவரி முதல் வாரத்தில் கண்டறியப்பட்டது. அவரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.