சாதி, மதம் குறித்து குறித்து சூப்பர் முடிவெடுத்த தமிழக அரசு!

05.09.2026 08:40:52

பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது சாதி, மதம் குறித்த அடையாளங்களை குறிப்பிடுவது கட்டாயம் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டிபட்டியை சேர்ந்த விக்ரமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனியார் கல்வி நிறுவனங்களில் ஆரம்ப கட்டத்தில் மாணவர்களிடம் சாதி கேட்க கூடாது என விதி உள்ளது.

  

இதை மீறி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது விண்ணப்பதாரர்களின் சாதி மற்றும் சமூக விவரங்களை கட்டாயமாக கேட்கப்படுகிறது. இது மாணவர்கள் தேர்வு மற்றும் சேர்க்கை செயல்முறைகளில் பாகுபாடு ஏற்பட வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் விண்ணப்ப படிவங்களில் சாதி அல்லது சமூக விவரங்களை கட்டாயமாக சேகரிக்க தடை விதித்தும் தனியார் நிறுவனங்களில் பாகுபாடு இல்லாத சூழலை உறுதி செய்ய வழிகாட்டுதல்களை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், பள்ளிகளை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி, தனியார் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கையின்போது சாதி, மத அடையாளங்களை கட்டாயம் கேட்க கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், இதேபோன்ற மற்றொரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களை குறிப்பிட கட்டாயப்படுத்த கூடாது என கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அரசாணையை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். அரசு கல்வி நிலையங்களில் சாதி சான்றிதழ் என்பது கல்வி உதவித் தொகை உள்ளிட்டவற்றிற்குதான். ஆனால், பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. இருப்பினும் எதற்காக சாதி சான்றிதழ் கேட்கப்பட வேண்டும் என்று? பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.