கவனிப்பாரற்றுக் கிடக்கும் பொருளாதார மத்திய நிலையம்.

13.08.2025 08:08:52

யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பகுதியில் இயங்காத நிலையில் காணப்பட்டிருந்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

 

மட்டுவில் பிரதேசத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 திகதி அன்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் குறித்த பொருளாதார மத்திய நிலையம் திறத்து வைக்கப்பட்டது.

கடந்த மூன்று வருடங்களாக பொருளாதார மத்திய நிலையத்தில் எந்த வொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதனை இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும்  அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர், இளங்குமரன், தென்மராட்சி பிரதேச செயலாளர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தை தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தில் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாகவும், கூட்டுறவு வங்கி தொடர்பாகவும் அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

 

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க ”கடந்த அரசாங்க காலத்தில் பல தடவைகள் இதனை ஆரம்பிப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால் அவை சாத்தியம் ஆகவில்லை. நாம் மட்டுவில் பொருளாதாரம் மத்திய நிலையத்தை, அடுத்த மாதம் இறுதிக்குள் திறந்து வைக்கவுள்ளோம்.

இந்த பிரதேசத்திலுள்ள வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள் பொருளாதார மத்திய நிலையத்தில் காணப்படும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் நாம்  கலந்துரையாடியிருந்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.