“நூறு நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சை”

10.05.2022 13:00:11

பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர்.

 

இந்நிலையில் அன்னையர் தினத்தில் அவருடைய குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "கடந்த சில மாதங்களாக நாங்கள் பயணித்த கடினமான நேரங்களை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. கடந்த நூறு நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எங்கள் குழந்தை இறுதியாக வீட்டிற்கு வந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் பயணமும் தனித்தன்மை வாய்ந்தது. எங்கள் குழந்தை இறுதியாக வீடு திரும்பியதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். 

 

குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நிபுணர்கள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் அடுத்த அத்தியாயம் தொடங்கியுள்ளது" என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.