ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின்

27.01.2021 09:06:18

‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என  அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 2016 டிசம்பர் 5ல்  ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 2021 ஜனவரி  27ல் ஜெயலலிதாவிற்கு  நினைவு மண்டபம் திறக்கப்படுகிறது.

இந்த நான்காண்டு காலமும் ஜெயலலிதாவிற்கு  உண்மையாக இல்லாத இரண்டு நபர்களால் அவரின்  நினைவகம் திறக்கப்படுவது அவருக்கு  செய்யும் துரோகம் ஆகும்.

இந்தத் துரோகத்தை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள்,  விசுவாசிகள் உணர்வர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் கட்டுப்பணம்  வாங்க பயன்படும் என்பதற்காக  நினைவிடம் கட்டித் திறப்பு விழா செய்கின்றனர்.

அ.தி.மு.க.வுக்கு மூடு விழா நடத்த மக்கள் தயாராகி விட்டனர். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம்,  கொடநாடு பங்களாவில் நடந்த கொலை,  கொள்ளைக்கு காரணமானவர்கள் என அத்தனை  குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.