பெங்களூர் அணி சிறப்பான வெற்றி - ஐ.பி.எல்

20.05.2022 10:31:29

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 67ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

 

மும்பையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சில், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோஹ்லி 73 ஓட்டங்களையும் டு பிளெஸிஸ் 44 ஓட்டங்களையும் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், ரஷித்கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 54 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 8 பவுண்ரிகள் அடங்களாக 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டார்.