முதலமைச்சர் கண்டனம்!

25.07.2024 08:32:18

அரசைப் பொதுவாக நடத்துமாறும்,  தேர்தலில் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் எனவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  பா.ஜ.க அரசை விமர்சித்துள்ளார்.

 

2024 – 2025 நிதியாண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை நேற்று மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு துறை,வேளாண் துறை மற்றும் ரயில்வே துறைகளுக்கு மாத்திரமே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பா.ஜ.க மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநிலங்களுக்கு எந்த ஒரு திட்டமும், நிதியும் ஒதுக்கப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  “ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

பிரதமர் மோடி அவர்களே… “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய வரவு செலவுத் திட்டம் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது! அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்படுத்தப்படுவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்” இவ்வாறு மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.