முள்ளிவாய்க்கால் வளாகத்தை சூழ பலபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

14.05.2022 15:48:45

தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இம்மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு காவல்துறையினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். 

முள்ளிவாய்க்கால் வளாகத்தை சூழ பலபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு- ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு அருகில் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு முள்ளிவய்க்கால் நினைவு முற்றத்திற்கு அருகில் காவல்துறையினரும் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு முள்ளிவய்க்கால் நினைவு முற்றத்திற்கு செல்லும் சந்தியில் இராணுவத்தினர் காவல்துறையினா குவிக்கப்பட்டு சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்று ஊடகவியலாளர் வீடியோ பதிவு செய்ததன் பின்னர் திரும்பி சென்ற நிலையில் முள்ளிவய்க்கால் நினைவு முற்ற சந்தியில் நின்ற காவல்துறையினர், இராணுவ புலனாய்வாளர்களின் தூண்டுதலின் பெயரில் ஊடகவியலாளரை தடுத்து நிறுத்தியுள்ளனர் என ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் போது எதற்காக தடுத்து நிறுத்துகிறீர்கள் என்று கேட்டபோது எந்தவித பதிலையும் சொல்ல முடியாது நின்ற காவல்துறையினர் சிறிது நேரத்தில் ஊடகவியலாளரின் அடையாள அட்டையை கோரியுள்ளனர்.

 

 

அடையாள அட்டை வழங்கிய ஊடகவியலாளர் ஏன் என்று கேட்டபோது வீடியோ எடுத்தீர்களா என கோரி தங்களுடைய பதிவேடு ஒன்றில் விபரங்களை பதிவு செய்தனர். 

இவ்வாறான பின்னணியில் காவல்துறையினரின்ன இந்த செயற்பாடுகள் தொடர்பில் காணொளி பதிவு செய்ய முயன்ற போது வாகனத்தின் சாரதிஅனுமதி பத்திரம் மற்றும் ஆவணங்களை காண்பிக்குமாறு காவல்துறையினர் கோரி பதிவுசெய்து அனுப்பியுள்ளனர். 

 

 

ஊடகவியலாளர் வரும்போது குறித்த பகுதியில் இராணுவ புலனாய்வாளர்கள் காவல்துறையினருடன் கலந்துரையாடிக்கொண்டிருந்ததாகவும் அவர்களுக்கு தகவல்களை வழங்கவே காவல்துறையினர் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.   

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்யப்படலாம் என்ற நிலையில் மக்களை அச்சமடைய செய்யும் நோக்குடன் காவல்துறையினர்   அங்கு செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து தங்களுடைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். 

 

இதன் ஒரு அங்கமாகவே குறித்த பகுதிக்கு சென்றுவந்த ஊடகவியலாளரை மறிந்த காவல்துறையினர் ஊடகவியலாளரிடம் ஆவணங்களை கோரி ஆவணங்களை தங்களுடைய புத்தகங்களில் பதிவு செய்தனர்.

இதன் ஊடாக குறித்த தகவல்களை புலனாய்வாளர்களும் இராணுவத்தினருக்கும் வழங்குவதற்காகவே பெற்றுக் கொண்டுள்ளனர் எனவும் இராணுவம்,புலனாய்வாளர்கள் விபரங்களை பெற்றால் அது பிரச்சினையாக வரும் என்பதால் அவர்களின் எடுபிடிகளாக காவல்துறையினர்  செயற்படுவதாக ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.