அதிகளவு தமிழ்க் கட்சிகள் இந்திய துணை ஜனாதிபதியின் விமர்சனம்!

22.04.2026 14:11:20

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக் சுட்டிக்காட்டிய இந்தியத் துணை ஜனாதிபதி, அவற்றை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"இந்தியத் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள், எனதும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனதும் கைகளைப் பிடித்துக்கொண்டு, 'தற்போது அரசியல் கட்சிகள் அதிகரித்துவிட்டன, இதனை ஓரளவுக்கு ஒழுங்குக்குக் கொண்டு வாருங்கள்' என்று குறிப்பிட்டார்.

இதில் உள்ள ஆழமான கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று வீட்டுக்கு வீடு, மாவட்டத்துக்கு மாவட்டம் எனப் பல கட்சிகள் உருவாகிவிட்டன. உண்மையில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன என்பதே தெரியாத நிலை காணப்படுகிறது.

அரசியல் அனுபவமும் ஞானமும் கொண்ட, பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய ஒருவரின் வாயிலிருந்து இக்கருத்து வருகின்றது என்றால், அது ஆரோக்கியமானதல்ல என்பதை நாம் உணர்ந்து அவதானமாக ஆராய வேண்டும். அவர் கூறிய இந்தக் கருத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.

துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடனான சந்திப்பு மிக ஆரோக்கியமானதாக அமைந்தது. எமது கருத்துக்களை அவரிடம் விரிவாக முன்வைத்தோம். ஒரு தமிழர் என்ற ரீதியில் அவர் எமது பிரச்சினைகளை ஆழமாகப் புரிந்து வைத்துள்ளார். அரசியலமைப்பு விவகாரங்கள் மட்டுமன்றி, மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகவும் நாம் அவரிடம் கலந்துரையாடினோம். குறிப்பாக, மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். இது குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாக அவர் எங்களிடம் தெரிவித்தார். அத்துடன், எமது அரசியல் தீர்வாக 'சமஷ்டி' முறையையே நாம் அவரிடம் தெளிவாக வலியுறுத்தியுள்ளோம்" என சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.