’தொழில்நுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களாகும்’

06.04.2024 09:00:00

அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் 2022 வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும்  தெரிவிக்கையில்,

 நான் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் இப்பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அதன் முடிவுகளை இன்று காணலாம். எனது வாழ்க்கையின் மிகவும் கடினமான காலப்பகுதியில் நான் இந்த சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரிக்கு அருகிலேயே வாசித்தேன்.

கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டை மீண்டும் வீழ்ச்சியடைய விடாமல் திட்டமிட்டு நாட்டை கட்டியெழுப்ப முடிந்தது. இது போதுமானது அல்ல. இன்னும் 05 முதல் 10 ஆண்டுகள் இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும்.

நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டும். நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் வேகமாக வளரும் சமுதாயத்தில் இணைவீர்கள். அதற்கு உங்களை தயார்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இன்றைய பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினிகள் மூலம் நவீன உலகத்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது கல்வியின் புதிய ஆயுதம்.

நாம் ஒரு நாடாக அபிவிருத்தியடைய வேண்டும். அடுத்த 10-15 ஆண்டுகளில் வலுவான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். உலகத்துடன் இணைந்து நாம் இந்தப் பயணத்தில் செல்ல வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் நவீனமயமாக்கல் அவசியம்.

வேகமாக மாறிவரும் இந்த உலகில் அறிவை வளர்ப்பது மிகவும் அவசியம். உங்கள் அறிவைப் புதுப்பிக்காமல் உலகத்துடன் முன்னேற முடியாது. எனவே, அறிவைப் புதுப்பித்தல் கல்வியின் முக்கியப் பணியாகிறது. இந்த நோக்கத்திற்காக, அரசாங்கம் இந்த நாட்டில் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது என்றார்