புனித் ராஜ்குமார் வாழ்க்கை சினிமா ஆகிறது

24.11.2021 13:15:24

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சிகள் தொடங்கி உள்ளன. புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை பல இளைஞர்களுக்கு முன்னோடியானது, நடிப்பு மட்டுமல்லாமல் மனிதாபிமானம், சமூக சேவை, கண்தானம், கல்வி உதவி என பல தளங்களில் அவர் பணியாற்றினார். எனவே அவரது வாழ்க்கை திரைப்படமாக தயாராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதற்கு பதில் அளித்துள்ள கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனரான சந்தோஷ் ஆனந்த்ராம், புனித் ராஜ்குமாரின் வாழ்க்கையை திரைக்கு கொண்டு வர என்னால் இயன்ற முயற்சிகளை செய்வேன் என்று கூறியிருக்கிறார். இவர்தான் புனித் ராஜ்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான யுவரத்னா படத்தை இயக்கியவர். வேறு சிலரும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.