தேர்தல் தாமதமாகும் அபாயம்

20.03.2024 07:46:32

தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள பெஃப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ரோஹன ஹெட்டியாராச்சி, தேர்தல் முறைமை திருத்தப்பட்டு எல்லை நிர்ணய பணிகள் துரித கதியில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வது தொடர்பான யோசனை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது நாடாளுமன்றத் தேர்தல் முறையை கலப்பு விகிதாசார முறைக்கு கொண்டு செல்வது பற்றியதாகும் என்றும் எனவே, நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படுவதாயின், அதில் ஒரு அங்கமாக வரும் எல்லை நிர்ணயத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக இணக்கம் காணப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஏதோ ஒரு வகையில் எல்லை நிர்ணயம் முடிவுக்கு வரவில்லை என்றால், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள், தேர்தல் முறையில் திருத்தம் செய்யப்பட்டாலும், தற்போதுள்ள தேர்தல் முறையிலேயே தேர்தல் நடத்தும் அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கும் திருத்தத்தை இந்த வரைவில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இல்லையெனில், தேர்தல் முறை திருத்தப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டாலும் எல்லை நிர்ணயம் முடிவடையாமல் போகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.