பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு!

12.02.2021 09:38:40

பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வருவதை முன்னிட்டு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் திகதி சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்திற்கு காலை 10.40 மணியளவில் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கிற்கு செல்கிறார். அங்கு மெட்ரோ ரெயில் விரிவாக்கம் மற்றும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதைத்தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்புகளுக்காக 20 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பின் பிரதமர் மோடி பிற்பகல் 1.30 மணியளவில் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் மோடி 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் சென்னை விமான நிலையம், அடையாறு ஐஎன்எஸ், நேரு உள்விளையாட்டரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.