அமெரிக்க போர் கப்பலையும் விட்டு வைக்காத ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

28.01.2024 03:08:04

ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் கார்னி போர்க்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்தின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையிலும் பலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என இந்த தாக்குதல் குறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியிருந்தனர்.

மத்திய கிழக்கு கடல் பகுதியில் தொடர்ந்து வணிக கப்பல்களை தொந்தரவு செய்து வரும் ஹவுதி கிளார்ச்சியாளர்கள் தற்போது அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது நடத்தியுள்ள இந்தத் தாக்குதலானது, கடந்த சில தசாப்தங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில்  (27) அதிகாலை செங்கடலை குறிவைத்து தாக்குதல் நடத்த தயாராக இருந்த ஹவுதி கப்பலின் ஏவுகணைக்கு எதிராக அமெரிக்கப்படைகள் எதிர் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஹவுதியின், துறைமுக நகரான ஹொடெய்டா அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ள நிலையில், தாக்குல்களில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து எந்த தகவலும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே உக்கிரமடைந்து வரும் போரில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.