காங்கிரஸ் போராட்டம்- டெல்லியில் ராகுல், பிரியங்கா கைது

05.08.2022 10:52:26

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் திரண்டனர். ராகுல்காந்தி, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களும் காலையிலேயே கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்திருந்தனர். காங்கிரசின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டர்கள் சாலைகளில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க சென்ற ராகுல்காந்தி கறுப்பு சட்டை அணிந்து இருந்தார். அதேபோல் காங்கிரஸ் எம்.பி.க்களும் கறுப்பு நிறத்திலான ஆடைகளை அணிந்து இருந்தனர். பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடந்தது. பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகையை நோக்கி ராகுல் காந்தி தலைமையில் பேரணியாக சென்றனர். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பேரணிக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். ஆனால் காங்கிரசார் முன்னேறி செல்ல முயன்றனர்.