ஈழத்தமிழர்களின் உரிமையை மறுக்கும் அநுர.

26.09.2025 08:14:35

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  உலகத்தின் பார்வையில் தன்னை ஒரு புனிதராக சித்தரிப்பதற்கு முற்படுவதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Shivajilingam) கடுமையாக சாடியுள்ளார்.

பலஸ்தீன மக்களுக்கான தனி அரசுக்கான பிரிக்க முடியாத உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம், இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீன மக்களின் நியாயமான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான தேவைகளை அங்கீகரிப்பதும் அவசியம் என ஜனாதிபதி அநுர ஐக்கிய நாடுகள் அமர்வில் உரையாற்றி விவகாரம் தமிழர் தரப்பில் பாரிய விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகினறது.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

 

பாலஸ்தீனம் மீது அக்கறை

அவர் மேலும் தெரிவிக்கையில்,  பாலஸ்தீனம் தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. பாலஸ்தீனம் மீது அக்கறை செலுத்திய ஜனாதிபதி ஏன் தனது சொந்த நாட்டு மக்கள் மீது அக்கறை செலுத்தத் தவறினார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்கள் தமது சொந்த நிலங்களில் வாழ முடியாமல் அவதியுறுகின்றனர்.  அவர்கள் மதத்தலங்கள் தொல்லியல் எனும் போர்வையில் அபகரிக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு பற்றி அநுர அரசுக்கு அக்கறை இல்லை என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இதயசுத்தியுடன் செயற்படுகின்றார் என்றால் ஏன் ஒரு தேசிய இனத்திற்கான உரிமையை அவர்களுக்கான அங்கீகாரம் வழங்க மறுக்கின்றார்.

எனவே உலகத்தின் பார்வையில் தன்னை ஒரு புனிதராக சித்தரிப்பதற்கு ஜனாதிபதிஅநுரகுமார திஸாநாயக்க முற்படுகின்றார் என்றார்.