பிள்ளையான் வெளிப்படுத்தியதாக கூறுவது பொய்!

02.07.2026 15:04:33

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. நீதிமன்றுக்கு அவ்வாறு ஏதும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

 

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விடயங்களை அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்தியுள்ளது. அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் அரசியல் வழிவாங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விடயங்களை குறிப்பிட்டதாக ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் குறிப்பிட்டார்கள். ஆனால் நீதிமன்றுக்கு அவ்வாறு ஒன்றும் அறிவிக்கப்படவில்லை.

குண்டுத்தாக்குதல்கள் குறித்து முறையான விசாரணைகள் இடம்பெற்றால் அதை நாங்கள் எதிர்க்க போவதில்லை. ஆனால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகள் மாத்திரமே தற்போது இடம்பெறுகின்றன.

சுரேஸ் சலே கைது மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையின் ஊடகபேச்சாளர் சிறில் காமினி குறிப்பிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி அவரிடம் 10 கேள்விகள் கேட்டிருந்தேன்.ஆனால் அதற்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை என்றார்.