84,875 Kg களஞ்சியசாலைக்கு சீல் வைப்பு

09.08.2023 08:45:06

பாவனைக்கு உதவாத மல்லியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலை மீது அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினர் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

பொது மக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன வழிகாட்டலில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளினால் கல்முனை - 03 அம்மன் கோயில் வீதியில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த 84,875 kg மல்லி மற்றும் 300 kg நிறச்சாயம் (டை) என்பன பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலையே இவ்வாறு முற்றுகையிடப்பட்டது.

நேற்று (08) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே மனித பாவனைக்கு உதவாத மல்லி நிறச்சாயம் இட்டு விற்பனை செய்வதற்கு தயார் படுத்தபட்டு களஞ்சிய அறையில் பதுக்கி வைத்திருந்த மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 44 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு குறித்த களஞ்சியசாலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்பட்டு எச்சரிக்கையுடனான அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழக்கு தாக்கல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையுடன் இணைந்து இந்த சுற்றி வளைப்பில் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வு பிரிவினரும் பங்கேற்றதுடன் அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத பொருட்களை களஞ்சியப்படுத்தும் வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கெதிராக நீதவான் நீதிமன்றில் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்துக்கமைய வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.