
அரசாங்கத்தின் ஆணவப் பேச்சுக்குப் பதிலடி!
பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சகல உள்ளுராட்சிமன்றங்களிலும் ஆட்சியமைப்போம் என்று அரசாங்கம் ஆணவப் பேச்சி பேசியது. தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தின் பலவந்த போக்கிற்கு பதிலடியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். |
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தமக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சகல உள்ளுராட்சிமன்றங்களிலும் ஆட்சியமைப்போம் என்று அரசாங்கம் ஆணவப் பேச்சு பேசியது. ஆனால் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களுக்கமைய 161 சபைகளில் மாத்திரமே ஆட்சியமைக்க முடிந்துள்ளது. எஞ்சியுள்ள 178 சபைகளில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் மூலமே ஆட்சியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது என்பது இதன் மூலம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இம்மாதம் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது. ஆனால் நாட்டில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே அரசாங்கம் மக்கள் செல்வாக்கினை இழந்து வருகிறது. கடந்த அரசாங்கத்தில் எரிபொருள் இறக்குமதி, விநியோகத்தில் பாரிய ஊழல் இடம்பெறுவதாக தேசிய் மக்கள் சக்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. ஆனால் அந்த அரசாங்கத்தில் விலை திருத்தங்கள் முறையாக முன்னெடுக்கப்பட்டன. எனினும் தாம் தூய்மையானவர்கள் எனக் கூறிக் கொள்ளும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையிலும், இலங்கையில் விலை குறைக்கப்படாமைக்கான காரணம் என்ன? அவ்வாறெனில் இந்த அரசாங்கத்திலும் ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றனவா? அல்லது உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை வழங்கவில்லை என மக்கள் மீது அரசாங்கம் கோபம் கொண்டுள்ளதா? ஜனாதிபதி அநுர பதவியேற்ற நாள் முதல் இதுவரையில் நாட்டுக்கு ஒரு வெளிநாட்டு முதலீடு கூட கிடைக்கவில்லை. டொலர் வருமானத்தை அதிகரிக்காமல் ஒருபோதும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. பாராளுமன்றத்துக்கு கூட தெரியப்படுத்தாமல் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆனாலும் அவற்றின் ஊடாகக் கூட எந்தவொரு முதலீடும் கிடைக்கவில்லை என்றார். |