விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் செக்

27.07.2024 08:00:00

திரைத்துறையில் விஷால் நடிகர் என்பதைத் தாண்டி ‘விஷால் பிலிம் பேக்டரி’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும், அவர் தற்போது உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இதற்கு முன்பு விஷால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி இருந்திருக்கிறார். அப்போது சங்க பணத்தை முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்,நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் விஷாலுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், விநியோக சங்கத்தினர், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தயாரிப்பாளர் சங்கம் விஷால் குறித்து எடுத்த முடிவை கூறியிருக்கிறார்கள். அதற்கு விநியோக சங்கத்தினரும்,  திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால் பிரச்சனை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

அந்த அறிக்கையில், “கடந்த 2017-2019 ஆம் ஆண்டு வரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால், மீது எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக சங்கத்திற்கு புதிதாக ஒரு அதிகாரியைத் தமிழக அரசு நியமித்திருந்தது. அவர் சங்கத்தின் கணக்கு வழக்குகளைப் பார்க்க ஸ்பெஷலாக அதிகாரிகளையும், ஆடிட்டர்களையும் நியமனம் செய்திருந்திருந்தார். அந்த ஆடிட்டர்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் விஷால் தலைவராக இருந்த சமயத்தில், சங்க நிதியை தவறான முறையில் பயன்படுத்தியிருப்பதாகவும் வரவு - செலவில் சுமார் ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். முறைகேடாக பயன்படுத்திய அந்தத் தொகையை சங்கத்திற்கு திருப்பி கொடுக்க சொல்லியும் விஷால் பதிலளிக்காத காரணத்தால், இனிவரும் காலங்களில் அவரை வைத்து படம் தயாரிக்கவுள்ளவர்கள் சங்கத்தில் கலந்தாலோசித்த பிறகுதான் படத்திற்கான பணிகளை தொடங்க வேண்டும்” எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.