பதவியில் இருந்து பிரதமர் ராஜினாமா

20.10.2022 15:00:00

பிரிட்டனின் பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகினார். தான் ஒரு தவறு செய்து விட்டதாகவும், அரசு விதிகளை மீறி விட்டதாகவும் கூறிய அவர், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டதாக கூறினார். அதன்பின்னர் முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர். இதனால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இவ்வாறு அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடிக்கும் சூழ்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட டிரஸ், கட்சியின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறினார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதை அறிவிப்பதற்காக மன்னரிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.