எத்தியோப்பியாவில் கடுமையான பஞ்சம்- ஐ.நா கவலை

07.10.2021 13:07:00

“வடக்கு எத்தியோப்பியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையான பஞ்சத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பொதுச் செயலாளர் அந்தோணியா குத்தரெஸ் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவில் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக இனக்குழுக்களிடம்  மோதல் நிலவுகிறது. முன்னதாக, 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட்டது.

அண்டை நாடான ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவிவந்த இராணுவ ரீதியிலான சிக்கலைக் கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்குக் கொண்டுவந்தார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சொந்த நாட்டில் நிலவும் இனக்குழு பிரச்சினைகளை அபய் அகமதுவால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லையா? என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பொதுச் செயலாளர் அந்தோணியா குத்தரெஸ்  கூறும்போது, “வடக்கு எத்தியோப்பியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையான பஞ்சத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவற்றைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் தேவை. எத்தியோப்பியாவின் நிலைமை எங்களை வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது” என்றார்.