பங்களாதேஷ் அணிக்கெதிராக ரி-20 தொடரை முழுமையாக வென்றது பாகிஸ்தான் !

23.11.2021 11:06:07

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 3-0 என்ற கணக்கில், பாகிஸ்தான் அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நய்ம் 47 ஓட்டங்களையும் ஷெமின் ஹொசைன் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், உஸ்மான் காதீர் மற்றும் மொஹமட் வசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் தஹானி மற்றும் ஹரீஸ் ரவூப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹெய்டர் அலி 45 ஓட்டங்களையும் மொஹமட் ரிஸ்வான் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மொஹமதுல்லா 3 விக்கெட்டுகளையும் சஹீதுல் இஸ்லாம் மற்றும் அமினுல் இஸ்லாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஹெய்டர் அலி தெரிவுசெய்யப்பட்டார். மேலும், தொடரின் நாயகனாக மொஹமட் ரிஸ்வான் தெரிவுசெய்யப்பட்டார்.