அதிகாரங்கள் அத்தனையும் ரணிலின் கைகளில்

13.05.2022 09:03:46

பிரதமர் பதவிக்கு பல பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தான் தெரிவு செய்ததாகவும், அமைச்சரவையை தெரிவு செய்யும் முழு அதிகாரத்தையும் ரணிலிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னர் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்ரமசிங்கவுக்கே அமைச்சரவையை தெரிவு செய்யும் முழு அதிகாரமும் இருக்கின்றது.

 

அமைச்சுப் பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு புதிய பிரதமருக்கு ஆதரவளிக்குமாறு கோட்டாபய முன்னாள் அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

முன்னாள் அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர்களுடன் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கலந்துரையாடியிருந்தார். இதன் போது, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டதுடன், முன்னாள் அமைச்சர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.

 

இதன் போது, மக்களுக்கு எரிவாயு, மின்சாரம் மற்றும் எரிபொருளை தொடர்ந்து வழங்குவதே தனது முதல் கடமை எனவும், இது தொடர்பில் சர்வதேச உதவி நிறுவனங்களுடன் கலந்துரையாடியதாகவும் பிரதமர் ரணில் குறிப்பிட்டார்.