பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது!

28.07.2022 16:05:25

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்காக சென்னைக்கு விஜயம் செய்யும் பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆரம்ப நிகழ்ச்சியிலும், அண்ணா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தாலும் அவரது வருகை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏதேனும் மாற்றத்தை உருவாக்குமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது.

டெல்லி சென்றும் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து உரையாட முடியாமல் சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் இன்று மாலை விமான நிலையத்தில் பிரதமரை எடப்பாடி பழனிசாமி வரவேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வரவேற்க மட்டுமே நேரம் இருக்கும். அரசியல் பேசும் அளவுக்கு அப்போது நேரமிருக்காது.

பின்னர் மோடி அங்கிருந்து ஐஎன்எஸ் கடற்படை தளம் செல்கிறார். அங்கு அவரை ஓ.பன்னீர் செல்வம் வரவேற்கிறார். பின்னர் நேரு உள் விளையாட்டரங்கம் செல்லும் மோடி 6 மணிக்கு 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார். மாலை 6.30 மணிக்கு விழா நிறைவடைந்ததும் பிரதமர் மோடி கார் மூலம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.

இன்று இரவு ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்குகிறார். அங்கு முக்கிய பிரமுகர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மோடியை தனித்தனியே சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்கள் இருவரையும் சந்திக்க மோடி இதுவரை நேரம் ஒதுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

நாளை காலை 9.55 மணிக்கு கிண்டி, ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி மூலம் அண்ணா பல்கலைக்கழகம் செல்கிறார்.

அங்கு, நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த விழா காலை 11.30 மணி வரை நடைபெறும். விழா முடிந்ததும், அங்கிருந்து நேராக காலை 11.45 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்று மதியம் 12 மணிக்கு தனி விமானம் மூலம் மோடி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.