முதலீட்டை எடுத்த 'மாநாடு'

30.11.2021 08:23:48

 

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் நவம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் 'மாநாடு'. இப்படத்திற்கு விமர்சனங்களும், வரவேற்பும் சிறப்பாக இருந்ததால் பெரும்பாலான காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே கடந்த ஐந்து நாட்களாக அமைந்தது.

முதல் இரண்டு நாட்களில் இப்படம் 14 கோடி வசூலித்தது என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன் பிறகான வசூல் என்னவென்பதை அவர் அறிக்கவில்லை. ஆனால், கடந்த ஐந்து நாட்களில் இப்படம் 30 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் மொத்த பட்ஜெட் 30 கோடிக்குள்தான் இருக்கும் என்பதால் போட்ட முதலீட்டைத் தயாரிப்பாளர் எடுத்துவிடுவார் என்கிறார்கள். இனி வசூலாகும் தொகை படத்தின் லாபக் கணக்கில்தான் சேரும்.

மேலும், இப்படத்தின் ரீமேக் உரிமைகள் தற்போது நல்ல விலைக்கு கேட்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். ஏற்கெனவே படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை விற்றுவிட்டு படத்தை தெலுங்கிலும் டப் செய்து முடித்துவிட்டார்கள். ஆனால், படம் இன்னும் வெளியாகவில்லை. இப்போது தெலுங்கு டப்பிங்கை வெளியிடுவார்களா அல்லது அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு நல்ல விலைக்குக் கேட்கப்படும் ரீமேக் உரிமையை விற்பார்களா என்பது விரைவில் தெரிய வரும்.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்புவும் தனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் திரையுலகில் தகவல் பரவி வருகிறது.