கோபா தலைமை எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும்

06.12.2024 09:38:03

கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதனால் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப் ) குழுவின் தலைமைப் பதவி  அரசாங்கத்துக்கு தேவை. அதேநேரம் அரச கணக்கு குழுவின்  (கோபா ) தலைமை பதவி  எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுமென சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (06)  பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் உறுப்பினர்களின்  எண்ணிக்கை தொடர்பில் ஏற்பட்ட  சர்ச்சையின்போதே  இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு உறுப்பினர்களின்   எண்ணிக்கையை  அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கேட்டாலும் தற்போதுள்ள எண்ணிக்கையில் ஓர் உறுப்பினரை மட்டும்  அதிகரிப்பதற்கு இணங்குகின்றோம் என்றார்.

 எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 12 கட்சிகள் இருப்பதால் பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்த எதிர்க்கட்சிகளில்  6 பேருக்கே இடமளிக்கப்பட்டிருக்கிறது.

அதில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி பிரதமகொறடா ஆகியோர் உத்தியோகபூர்வமாக அதில் இடம்பெறுகின்றனர்.எஞ்சிய 4பேரையும் நியமிப்பதிலேயே பிரச்சினை இருப்பதாக எதிர்க்கட்சி பிரதமகொறடா கயந்த கருணாதிலக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.


இதற்கு சபை முதல்வர் பதிலளிக்கையில் , அனைத்து கட்சிகளையும் பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அதனால் பாராளுமன்றத்தில் இருக்கும் ஏனைய முக்கியமான குழுக்களில்  அவர்களின் பிரதிநிதித்துவத்துக்கு இடமளிக்க முடியும்.

அந்த வகையில் அரச கணக்கு குழுவின் (கோபா ) தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு நாங்கள் தீரமானித்திருக்கிறோம். அது நீங்கள் கேட்டு நாங்கள் வழங்கவில்லை. அதனை நாங்கள் நியாயமான முறையிலே எதிர்கட்சிக்கு வழங்குவதற்கு தீரமானித்திருக்கிறோம். அந்த குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்