“இதுவரை ஏன் இழப்பீடு வழங்கப்படவில்லை?”.
|
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (19.04.2026) விடுமுறை தினம் என்றாலும் கூட வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது, ஆலையில் திடீரென யாரும் எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஆலையில் இருந்த பட்டாசுகள் மற்றும் மூலம் பொருட்கள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதால் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு அதிர்வுகள் ஏற்பட்டன. அதோடு அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. |
|
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர விபத்தின் போது பணியில் இருந்த தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக உயர்ந்தது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ரசாயன மூலப்பொருள்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே பட்டாசு ஆலை உரிமையாளரான ஊராட்சி மன்றத் தலைவர் முத்துமாணிக்கம் தலைமறைவானர். இத்தகைய சூழலில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். எனவே இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 25ஆக அதிகரித்தது. இந்நிலையில் இந்த வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. அதாவது, “உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வேண்டும். 75% அளவிற்குக் காயமடைந்தவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்” என உயிரிழந்தவர்களின் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை, “பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இதுவரை ஏன் இழப்பீடு வழங்கப்படவில்லை?” எனக் கேள்வி எழுப்பியது. அதற்கு அரசு தரப்பில், “தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது. |