அனுரவுடன் மோடி அவசர பேச்சு!

25.03.2026 09:04:00

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்றைய (24) தினம் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடலின் போது இரு தலைவர்களும், மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழல் குறித்தும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் இடையூறுகள் குறித்தும் விவாதித்தார்.

இந்த உரையாடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார, 

வளர்ந்து வரும் இந்த நிலைமைகள் பிராந்திய மற்றும் உலகளாவிய விநியோக வலையமைப்புகளில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் இங்கு மிகுந்த கவனம் செலுத்தினோம்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது – என்றார்.

 

இந்த உரையாடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் , மேற்கு ஆசியாவில் மேலெழுந்துள்ள சூழ்நிலை தொடர்பாகவும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி துறை பாதுகாப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் இடையூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இந்தியா-இலங்கை இடையில் எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காக கொண்ட முக்கிய முயற்சிகளின் முன்னேற்றம் குறித்தும் நாம் மீளாய்வு செய்தோம்.

மிகவும் நெருங்கிய மற்றும் நம்பகமான பங்காளராக, பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் நெருக்கமாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான எமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்தினோம் – என்றார்.

2026 பெப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கு ஆசிய மோதல் தொடங்கியது.

ஈரானும் தனது வளைகுடா அண்டை நாடுகளையும் இஸ்ரேலையும் தாக்கிப் பதிலடி கொடுத்தது.

 

இந்த மோதலின் காரணமாக, உலகின் 20 சதவீத எரிசக்தி விநியோகம் கடந்து செல்லும் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. 

ஹார்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் மிகச் சில கப்பல்களையே அனுமதித்துள்ளது.

ஹார்முஸ்  நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டிருப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்தியப் பிரதமர் மோடி திங்களன்று கூறினார்.

மேலும், இந்த நெருக்கடி மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருவதாகவும், இது உலகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணுமாறு அனைத்துத் தரப்பினரையும் ஒட்டுமொத்த உலகமும் வலியுறுத்துகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட இடையூறுகளின் தாக்கத்தைச் சமாளிப்பதற்காக, மேலதிக எரிபொருள் விநியோகம் கோரி அண்மைய நாட்களில் புது டெல்லியை அணுகிய இந்தியாவின் அண்டை நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

 

இந்த நிலையிலேயே இந்தக் கலந்துரையாடல் இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.