இந்தோனேசியாவில் 43 பேர் மாயம்!

03.07.2025 09:19:19

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் காணாமல் போன 43 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

 

கிழக்கு ஜாவாவின் கெட்டாபாங் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (02) இரவு புறப்பட்ட ‘The KMP Tunu Pratama Jaya’ என்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக இந்தோனேஷியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லொறிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

 

அவர்களில் பலர் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை இரவு முதல் இருளில் இரண்டு மீட்டர் (6.5 அடி) உயர அலைகளுடன் போராட்டத்துக்கு மத்தியில் தேடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகு துயரங்கள் பொதுவானவை.

அங்கு போக்குவரத்துக்காக படகுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.