பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது.

15.04.2026 14:36:56

பிரித்தானியாவின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டின் மூத்த ஆலோசகரும், நேட்டோ (Nato) அமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளருமான லார்ட் ஜார்ஜ் ராபர்ட்சன் (Lord George Robertson) வெளியிட்டுள்ள எச்சரிக்கை அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரின் அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் மெத்தனப்போக்கை (Corrosive Complacency) வெளிப்படுத்தி வருவதாக லார்ட் ஜார்ஜ் ராபர்ட்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் மூலோபாய பாதுகாப்பு மீளாய்வு (SDR) அறிக்கையை எழுதியவரே இத்தகைய விமர்சனத்தை முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றையதினம் சாலிஸ்பரியில் உரையாற்றிய அவர், திறைசேரியில் உள்ள இராணுவத்துறை சாராத நிபுணர்கள், பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் மேற்கொள்ளும் மாற்றங்களை “நாசவேலை” (Vandalism) என்று வர்ணித்தார்.

“தொடர்ந்து விரிவடைந்து வரும் நலன்புரித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு நம்மால் நாட்டைப் பாதுகாக்க முடியாது” என அவர் நேரடியாகத் தனது நிலைப்பாட்டைப் பதிவு செய்தார்.

லார்ட் ராபர்ட்சன் தனது உரையில் , பாதுகாப்புத் துறைக்கான 10 ஆண்டு முதலீட்டுத் திட்டத்தை அறிவிப்பதில் பிரதமர் கீர் ஸ்டார்மர் தயக்கம் காட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இந்தக் கடுமையான விமர்சனங்களை பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவை முற்றாக மறுத்துள்ளன.

ஈரான் போர் உள்ளிட்ட சர்வதேசப் பதற்றங்களுக்கு மத்தியில், பிரித்தானியாவின் பாதுகாப்பு குறித்த இந்த விவாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும் அலைகளை ஏற்படுத்தியுள்ளது.