முதன்முதலாக ஆதரவு வழங்கியவர் வடக்கு மாகாண ஆளுநரே

13.07.2024 09:59:35

நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க முதன்முதலாக ஆதரவு வழங்கியவர் வடக்கு மாகாண ஆளுநரே. – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு.

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நேற்று  நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

 

அந்தவகையில் 165 பேருக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,

மிக நீண்டகாலமாக உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான நிரந்தர  நியமனங்களை பெற்றுக்கொடுக்க பாரிய பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டன. எங்களின் கோரிக்கையை ஏற்று,   ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, பிரதமர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இவர்கள் இருவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். 165 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க அனுமதி கிடைத்துள்ளது. நீண்ட கால ஏக்கத்திற்கு ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தற்காலிக மற்றும் அமைய அடிப்படையிலான ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் செயற்பாட்டிற்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தான் முதன் முதலில் தனது ஆதரவை தெரிவித்ததாக பிரதமர் இதன்போது தெரிவித்தார். ஆளுநர் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியின் பலனாகவே இன்று 165 பேருக்கான நிரந்தர நியமனங்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் தங்களின் கடமைகளை உரியவாறு முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.