இலங்கையில் பசியால் வாடும் குடும்பங்கள் - வெளியான அதிர்ச்சிகர தகவல்

29.09.2022 00:32:56

பசியால் வாடும் பத்தில் நான்கு குடும்பங்கள்

இலங்கையில் எரிபொருள் மற்றும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு காரணமாக உணவைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் இதனால் பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டம் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இலங்கையர்களின் உணவு முறை ஆபத்தான நிலையில் இருப்பதுடன் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படாவிடின் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உணவு விலைகள் அதிகமாக இருப்பதால், பத்தில் நான்கு குடும்பங்கள் போதிய உணவை உண்பதில்லை என்றும் மாறுபட்ட உணவுகளை உட்கொள்வதும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரட்டப்பட்ட பாதியளவு டொலர்

இலங்கைக்கான நிவாரணத்துக்கு 63 மில்லியன் டொலர்களை உணவுத் திட்டம் திரட்ட வேண்டியுள்ளதாகவும் அதன் பாதியளவே தற்போது கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, அவுஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, நோர்வே, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து அரசாங்கங்களிடமிருந்தும், ஐக்கிய நாடுகளின் மத்திய அவசரகால பதில் நிதியம், தனியார் துறை பங்காளிகள் மற்றும் பலதரப்பு நன்கொடையாளர்களிடமிருந்தும் மொத்தமாக 29.35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாகவும் உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.