சட்ட அதிகாரிகள் எதிர்ப்பு!

14.02.2025 08:34:27

சட்ட மா அதிபரை பதவியிலிருந்து விலக்குவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக செயற்படுவதற்கு தாம் தயாராக உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் சட்ட ரீதியான முறைமைக்கு அமையவே விடுதலை செய்யப்பட்டதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனவரி 27ஆம் திகதி சட்ட மா அதிபரால் வெளியிடப்பட்ட ஆலோசனை தொடர்பில் வேறுபட்ட நிலைப்பாடுகள் தெரிவிக்கப்படுவதோடு, அது குறித்த தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றன. குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் விடுவிப்பதற்கு ஆலோசனை வழங்கியபோது அதற்குரிய சட்ட முறைகள் சட்ட மா அதிபரால் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன.

அரசியல் நலன்களுக்காகவோ மக்களின் நிலைப்பாடுகளைக் கருத்திற்கொண்டோ அந்த தீர்மானம் எடுக்கப்படவில்லை. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத் தன்மையின் அடிப்படையிலேயே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, சட்ட மா அதிபரை பதவியிலிருந்து விலக்குவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கு எதிராகவும் நாம் குரல் கொடுப்போம்.

ஒரு சுயாதீனமான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தனிச்சிறப்பு அரசியல் விளைவுகள் அல்லது பொது ஒப்புதலைப் பொருட்படுத்தாமல் முடிவுகளை எடுப்பதாகும். அந்த அடிப்படையிலேயே இந்த விவகாரத்திலும் சட்ட மா அதிபர் செயற்பட்டிருக்கிறார். சட்ட மா அதிபர் மற்றும் அதன் அதிகாரிகள் மீதான தனது நம்பிக்கையை எமது சங்கம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

குறித்த ஆலோசனைகள் தொடர்பான விடயங்களில் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து முக்கிய உண்மைகளையும் சட்டத்தையும் பரிசீலித்து, மூன்று சந்தேக நபர்களையும் விடுவிப்பதற்கு தங்கள் பரிந்துரைகளை முறையாக வழங்கியுள்ளனர்.

சட்ட மா அதிபர் அதைப் பரிசீலித்த பின்னர், பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதுடன், அதற்குப் பிறகு உரிய ஆலோசனையை வழங்கினார். அரசியல் பின்விளைவுகளோ பொதுக் கருத்துக்ளோ இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை. குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மற்றும் சந்தேக நபர்களை விடுவிப்பது என்பது ஒரு சுயாதீனமான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தனிச்சிறப்பாகும்.

சட்ட மா அதிபரின் முடிவுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய முடிவெடுக்கும் செயல்முறையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர்ந்த மரபுகளுக்கு ஏற்ப தங்கள் சுயாதீனமான தொழில்முறை தீர்ப்பைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

எனவே சட்ட மா அதிபரை பதவி நீக்கம் செய்யும் எந்தவொரு முயற்சியையும் எதிர்த்து நின்று தோற்கடிக்க தயங்க மாட்டோம் என்பதை சட்ட அதிகாரிகள் சங்கம் அழுத்தமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது என்றுள்ளது.