நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்

29.11.2021 07:45:35

நடன இயக்குனர் சிவசங்கர் கோவிட்டால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று இரவு காலமானார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் சிவசங்கர்(72) . 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். திருடா திருடி படத்தில் இவர் நடனம் அமைத்த மன்மதராசா பாடல் இன்றளவும் பேசப்படுகிறது. கடைசியாக பாகுபலி படத்திற்கு நடனம் அமைத்திருந்தார். இதுதவிர வரலாறு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, தில்லு முல்லு, அரண்மனை, சர்கார், உள்பட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிவசங்கர் மருத்துவ செலவுக்கு பண உதவி தேவைப்படுவதாக அவரது மகன் தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த கொரோனா காலகட்டத்தில் ஏராளமான மக்களுக்கு உதவிகளை செய்து வந்தவரான பாலிவுட் நடிகர் சோனுசூட், சிவசங்கர் மாஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தகவல் அறிந்து தான் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார். அதை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவி ரூ.3 லட்சம் நிதி உதவி அளித்து உதவினார்.

72 வயதான சிவசங்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வர, அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிவசங்கர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இந்நிலையில் இன்று இரவு சிவசங்கர் காலமானார்.