பாகிஸ்தான் கடும் பனிப்பொழிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு

09.01.2022 07:40:20

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி மற்றும் அதற்கு அருகாமை பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, வாகனங்களில் சிக்கி, குறைந்தது 21 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் பனிப் பொழிவு காரணமாக, தங்கள் கார்களுக்குள் பயணிகள் இருந்த நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டதே இவர்களின் இறப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

போக்குவரத்துத் தடையால் அப்பகுதிக்கு செல்லும் வழியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் – முர்ரி நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதுடன், முர்ரி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.