மேலும் 50 ஆயிரம் இராணுவ வீரர்களை சீன எல்லையில் நிறுத்தியது இந்தியா

29.06.2021 11:16:06

சீன எல்லையில் மேலும் 50 ஆயிரம் இராணுவ வீரர்களை இந்தியா நிறுத்தியுள்ளது.

கடந்த வருடம், சீன இராணுவத்தினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

இதனால் இந்தியா- சீனா எல்லை பகுதியில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வந்தமையினால் இரு தரப்பினரும் அதிகளவான படை வீரர்களை அப்பகுதியில் நிறுத்தினர்.

இந்நிலையில் இருநாட்டு இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து,  எல்லையில் படைகள் ஓரளவு திரும்ப பெறப்பட்டன.

ஆனாலும் சீன இராணுவத்தினரின் அத்துமீறலால் அவ்வப்போது பதற்றம் நிலவுகின்றமையினால் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை.

சீன எல்லையில் தற்போது 2 இலட்சம் இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில்,  மேலும் 50 ஆயிரம் வீரர்களை சீன எல்லையில் நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது.

அதாவது, இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன இராணுவத்தினர் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.