மேய்ச்சல் தரையினை மீட்டுத்தராவிட்டால் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும் - மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் !

03.12.2023 10:07:00

எங்கள் மேய்ச்சல் தரையினை மீட்டுத்தராவிட்டால் நாங்கள் இங்கு தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்படும் என மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக தமது கால்நடைகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுவருவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று (02) பசு ஒன்றின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக தமது கால்நடைகள் மீது அத்துமீறிய பயிர்செய்கையாளர்களினால் தாக்குதல் நடாத்தப்படுவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர்கள் பாராமுகமாக செயற்படுவதாகவும் ஜனாதிபதி எங்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக கால்நடைகள் மீது நடாத்தப்படும் தாக்குதல்களினால் பாரிய இழப்புகளை தாங்கள் எதிர்கொண்டு வருவதன் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தாங்கள் சொல்லொன்னா துன்பத்தில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளர்.

இதேநேரம் 79 நாட்களாக நேற்று அத்துமீறிய குடியேற்றக்காரர்களை வெளியேற்றக்கோரி மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.