வவுனியாவில் கோர விபத்து

03.12.2021 06:07:25

வவுனியா, வைவரவ புளியங்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (02.12) இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் உள்ள மதுபான விருந்தகம் ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று அங்கிருந்து வேகமாக புகையிரத வீதி ஊடாக குருமன்காடு நோக்கி சென்ற போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி தடம் புரண்டது.

இதன்போது முச்சக்கர வண்டியும் தடம் புரண்டு கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், கார் விபத்துக்குள்ளாகி தடம் புரண்டமையால் வீடு ஒன்றின் மதில் மற்றும் வீட்டின் கேற் என்பனவும் உடைந்து விழுந்துள்ளன.

குறித்த விபத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.