ஐ.நாவில் கோட்டாபயவை பிரதிநிதித்துவப்படுத்தும் அலி சப்ரி..!

17.09.2022 09:56:44

அமைச்சர் அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா அல்லது அவர் தனது வாடிக்கையாளரான கோட்டாபய ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் பங்கு குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் குறித்த கேள்விகளை எழுப்பினார்.

போதிய ஆதாரங்கள் உள்ளன   

இலங்கையில் பொருளாதார குற்றங்கள் இழைக்கப்படவில்லை என அமைச்சர் சப்ரி ஐக்கிய மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்திருந்த போதிலும், பொருளாதார குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக  சாணக்கியன் குறிப்பிட்டார்.

அப்போது, நீதியமைச்சராக இருந்து அரசியலமைப்பில் 20 வது திருத்தத்தை கொண்டு வந்தமையால் பொருளாதார குற்றத்துக்கு, அலி சப்ரியும் பொறுப்பேற்க வேண்டும் சாணக்கியன் குற்றம் சுமத்தினார்.

20வது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டமை காரணமாகவே, இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முடிந்தது. அதனால் பொருளாதார குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என அவர் வலியுறுத்தியுள்ளார்.  

அலி சப்ரியின் வாடிக்கையாளரான கோட்டாபய

இலங்கையின் டொலர் கையிருப்பு முற்றாக அழிந்துவிட்டது. உரத்தடை காரணமாக விவசாயிகள் மில்லியன் கணக்கில் நஷ்டமடைந்துள்ளனர். எரிபொருள் தட்டுப்பாட்டினால் மீன்பிடித் தொழில் அழிந்துள்ளது.

இந்தநிலையில் அமைச்சர் அலி சப்ரியின் வாடிக்கையாளரான கோட்டாபய ராஜபக்சவே இந்த பொருளாதாரக் குற்றங்களுக்குக் காரணம் என சானக்கியன் மேலும் தெரிவித்தார்.