பாடசாலைகள் மீள ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு !

24.09.2021 07:12:00

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அறிவிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோரது பங்குபற்றலுடன் இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் அண்மையில் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய 200 மாணவர்களை விட குறைந்த மாணவர் தொகையை கொண்ட பாடசாலைகள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதே வேளை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகளை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.