இன்று தவெக தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம்!

03.03.2026 08:21:42

தவெக தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம் இன்று பனையூர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் என்னென்ன ஆலோசிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம், தலைவர் விஜய் தலைமையில் பல மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்து வருகிறது.

கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் சந்திப்புகள் தற்போது நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களாக மாறியுள்ளன. அண்மையில் ஈரோடு, சேலம், வேலூர் பகுதிகளில் நிர்வாகிகள் சந்திப்புகள் நடைபெற்ற நிலையில், அடுத்த கட்டமாக நாளை (மார்ச் 4) தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள அய்யாசாமிப்பட்டியில் விஜய், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்திக்கிறார். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

தஞ்சை மத்திய மாவட்ட த.வெ.க. செயலாளர் விஜய் சரவணன் கோரிய அனுமதியை காவல்துறை இருமுறை ஆலோசித்து வழங்கியது. விஜய் எதிர்கொள்ளும் தனிப்பட்ட, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், தஞ்சை கூட்டத்தில் அவர் என்ன பேசவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தவெக செயல் வீரர்கள் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தங்கள் தொகுதிகளில் விஜய் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி, இக்கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

நேற்று சென்னை தியாகராயநகரில் நடந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உரையாற்றினார். அவர் பேசுகையில், 'வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும். அதுவரை காத்திருக்காமல் நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள்' என்று வலியுறுத்தினார். த.வெ.க. தேர்தல் அறிக்கை முழுமையாகத் தயாராகியுள்ளது. இதை வெளியிடும் தேதி குறித்து, இன்று (செவ்வாய்க்கிழமை) பனையூர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் அறிக்கை குழுவினர் அருண் ராஜ், ஜே.சி.டி. பிரபாகர், ராஜ்மோகன், மயூரி, சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.