நாட்டை மீட்டெடுக்க சகலரும் ஓரணியில் திரள வேண்டும் – ரணில் அறைகூவல்

29.07.2021 03:00:00

நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீட்டெடுக்க தேசப்பற்றுள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.என்று அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க.

இணையவழியாக நாட்டு நிலவரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

பழைய அரசியல் வழிமுறைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது. இனவாத அரசியலை மக்கள் வெறுக்கின்றார்கள்.

உண்மையில் நாட்டின் எதிர்கால நலன் கருதி எம்மிடம் ஒரு திட்டம் இருக்கின்றது. நாம் எதிர்கால நலனை அடிப்படையாகக்கொண்டே கதைக்கின்றோம்.

நாட்டை முன்னேற்றுவதற்குரிய தீர்மானங்களை நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையிடம் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இல்லாததால், அனைவருக்கும் கொரோனாத் தடுப்பூசி வழங்க முடியாத நிலை தொடர்கின்றது.

இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாடி, வெளிநாட்டு நாணயக் கையிருப்பைப்  பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் – என்றார்.